Tuesday 3 December 2013

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

(சொல்வனம் இதழில் ஜெயமோகனின் புதிய நாவலுக்கு எழுதிய அறிமுகம். நல்ல புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள்)

யானை பிரம்மாண்டமானது. மூர்க்கமடைந்த யானை எதிர்ப்படும் எல்லாவற்றையும் முட்டிப் பெயர்க்கும். அத்தனை பிரம்மாண்டமான காட்டு விலங்கு ஒற்றை சிறிய சங்கிலியில் கட்டப்பட்டு நோஞ்சான் மனிதன் அதன் வாயில் ஊட்டும் கவளச் சோற்றுக்காக காத்திருப்பது அவிழ்க்க இயலாத பிரபஞ்சப் புதிர்களில் ஒன்றுதான்.

யானை தன் ஆற்றலை உணர்வதில்லை. அச்சம் அடிமைத்தனத்தைப் பேணி வளர்க்கிறது. பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் மட்டும்தான் அஞ்சவேண்டும் என்பதில்லை, காலைச் சுற்றிப்படர்ந்திருக்கும் இலகுவான சங்கிலியாகக் கூட இருக்கலாம். இந்த தேசமும் அதன் மக்களும் உண்மையில் அப்படிப் பழக்கப்பட்ட யானைகள்தான். கரிய பிரம்மாண்டமான கம்பீரமான யானை. நோஞ்சான் வெள்ளை எஜமானர்கள் ஊட்டும் அழுகிய வாழைப்பழங்களுக்காக காலமெல்லாம் காத்திருக்கும் யானை.