நண்பர் நட்பாஸ் தளத்தில் வெளியான எனது முதல் சிறுகதை ..
ஜ்வாலையின் நாட்டியம்
அழைக்கிறது என்னை
எனக்கோ
பேழைக்குள் நெளியும் பாம்பும்
மரணத்தின் குறியீடு.
நெருப்பின் செயல் திறனும்
பௌதீகப் பயன்பாடும்
போதுமென்று விலகும்போதும்
தானாய்ப் பிறந்து சுடர்கிறது
உள்ளே ஒரு கணப்பு.
-
என்றோ வாசித்த யுவனின் இந்தக் கவிதை மின்சாரமற்ற இந்த நள்ளிரவில் ஏன் எனக்கு நினைவுக்கு வந்தது எனத் தெரியவில்லை. எழுந்து அந்த மெல்லிய பஞ்சு விரிப்பு விரித்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன். அதில் அமரும் போதெல்லாம் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து உறங்கிய நினைவுகள் எழும். சதைப்பற்றில்லாத உடல். எலும்புகள் மீது படரும் வெம்மையான மெல்லிய சதைத்துண்டு. மூங்கில் கழிகள் மீது போர்வை சுற்றி தலைக்கு வைத்துக்கொள்வது போலிருக்கும். டடக் டடக் என எலும்புகள் முடுக்கிக்கொள்ளும் ஒலிக்கூட கேட்கும். இறந்தவர்களையும் பிரிந்தவர்களையும் இருளிளிலும் தனிமையிலும் மனம் துழாவி கைக்கொள்வது வாடிக்கை தான்.