Tuesday 11 December 2012

ஓர் கனவு

காவிக்கல் சிகப்பு மண் விரவிய மாபெரும் நிலவெளி. முஷ்டி மடக்கி நீண்டிருக்கும் ஒற்றை நடுவிரல் போல் அங்கு ஓர் ஒற்றை பனை மரம். மண் அதிர்கிறது , முள்ளம்பன்றி சிலிர்த்து முட்கள் எழுவது போல் மண்ணிலிருந்து எழுகிறது. மண் விழித்துக் கொண்டுவிட்டது. முட்கள் நிறமற்று இருந்தன, அவை அடர்ந்து பச்சையாகின. பச்சைப்பெருவெளி. பச்சை மா மலைப்போல் மேனி!  பவழவாய் கமல செங்கம். பவழ வாய் எங்கே!? வானில் உருண்ட முந்திரிப்பழம் ஒன்று தெரிந்தது, ஆ..அதோ இருக்கிறது பவழ வாய்..முந்திரிப்பழம் பழுத்து சிவந்து வெடித்தது ..விதை மழை பொழிந்தது. விதை வெடித்து ஒன்று எழுந்தது, அது புற்களை தின்றது, உருண்டு திரண்டு ம்மா வென்று அழைத்தது..ஒரு சேர ஆயிரம் குரல், ஒற்றை சுருதியில் ம்மா....அம்மா தாயே பிரகிருதி..இறங்கி வரமாட்டாயா?  ..உண்டு செரிக்காத இரண்டு கத்திப் புல் காதுக்கு மேலே முளைத்து வளைந்து கொம்பானது. ..பச்சை மறைந்தது..கொதிக்கும் கரிய திரவம் குதத்தின் வழியாக பீறிட்டது ..கரிய சேற்றுக்குழி, குமிழ்கள் தோன்றி மறைகின்றன அதில். மழி ஓய்ந்த பின்னர் பேரிடி ஓசை. குத்தி கிழிக்கப்படுகிறது மண். கொம்பிழுத்து செல்கிறது. செம்மையும் பச்சையும் கருப்பும். ..ஒரு தண்டு தெரிகிறது, அது வளர்கிறது ..நீள்கிறது ..போகிறது..உச்சியில் ஒற்றைப்பூ பூக்கிறது, அது பழுக்கிறது..சிவக்கிறது..ஒளிர்கிறது..மண் சிலிர்க்கிறது ..நனைகிறது..பச்சை துளிர்க்கிறது.

2 comments:

  1. அப்புறம் என்ன ஆச்சு?

    ReplyDelete
  2. கனவை ஒரு அண்டரண்டா பட்சி கவ்வி சென்றுவிட்டது ..

    ReplyDelete