Sunday, 12 May 2013

நக்ர ரேதஸ் - சிறுகதை



நண்பர் நட்பாஸ் தளத்தில் வெளியான எனது முதல் சிறுகதை ..


ஜ்வாலையின் நாட்டியம் 
அழைக்கிறது என்னை 
எனக்கோ 
பேழைக்குள் நெளியும் பாம்பும் 
மரணத்தின் குறியீடு.
நெருப்பின் செயல் திறனும் 
பௌதீகப் பயன்பாடும் 
போதுமென்று விலகும்போதும் 
தானாய்ப் பிறந்து சுடர்கிறது 
உள்ளே ஒரு கணப்பு.
-

என்றோ வாசித்த யுவனின் இந்தக் கவிதை மின்சாரமற்ற இந்த நள்ளிரவில் ஏன் எனக்கு நினைவுக்கு வந்தது எனத் தெரியவில்லை. எழுந்து அந்த மெல்லிய பஞ்சு விரிப்பு விரித்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன். அதில் அமரும் போதெல்லாம் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து உறங்கிய நினைவுகள் எழும். சதைப்பற்றில்லாத உடல். எலும்புகள் மீது படரும் வெம்மையான மெல்லிய சதைத்துண்டு. மூங்கில் கழிகள் மீது போர்வை சுற்றி தலைக்கு வைத்துக்கொள்வது போலிருக்கும். டடக் டடக் என எலும்புகள் முடுக்கிக்கொள்ளும் ஒலிக்கூட கேட்கும். இறந்தவர்களையும் பிரிந்தவர்களையும் இருளிளிலும் தனிமையிலும் மனம் துழாவி கைக்கொள்வது வாடிக்கை தான்.

Wednesday, 8 May 2013

மருத்துவர் இல. மகாதேவன் - பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்)



சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை 

யோகமாசாம் து யோ வித்யாத் தேஷ கால உபபாதிதம்
புருஷம் புருஷம் வீக்ஷ்ய ச ஞேயோ பிஷகுத்தமஹ
- சரக சம்ஹிதை, சூத்திர ஸ்தானம்

(எவனொருவன் கால – தேச வர்த்தமானங்களை துல்லியமாக அறிந்து, அதற்கேற்ப ஒவ்வொரு நோயையும் பகுத்தறிந்து, ஒவ்வொரு மனிதனுக்குமான தனித்துவமான சிகிச்சை முறைகளை உணர்ந்து, மருத்துவம் செய்கிறானோ அவனே சிறந்த மருத்துவன் (பிஷக் உத்தமன்))

“எனக்கு …,” ஏதோ ஒரு கடும் துவர்ப்பான கஷாயத்தைக் குடித்து முகமும் மனமும் கசந்த முகபாவனையுடன் நிதானமாகச் சொன்னார், “ஆயுர்வேதமே ஒரு க்வாக்கரின்னுகூட அப்பப்ப தோணுறதுண்டு”. அவர் அப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். குழம்பித் திரிந்த அந்த நாட்களில் எனக்குத் தேவைப்பட்ட நம்பிக்கையை யாசித்துச் சென்றிருந்த நான் அவரிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவருடைய கண்களை உற்று நோக்கினேன், அதில் குறும்பு மின்னுகிறதோ? அல்லது ஆழத்தை நோட்டம் விடும் கேள்வியா? என்னால் பிரித்தறிய முடியவில்லை. தயக்கமில்லாமல் சொன்னேன், “சார், எனக்கு மருத்துவமே அப்படித்தான்னுதான் கொஞ்ச காலமா தோணுது” அவருக்கே உரிய அதிர்வேட்டு சிரிப்பொன்று அங்கு வெடித்துக் கிளம்பியது.

ayur_dr_mahadevan